தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அவசியம்!

327 0

தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது, அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம். ஆனாலும் தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூறக் முடியாது.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் அப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள்.

இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு.

இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தற்போது தெளிவாகக் கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அதன் மூலம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றார்.