பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவத் தடை: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு

327 0

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களோ, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையோ நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்த உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறையிடம் முறையீடு செய்துள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறையிடம் இன்று (ஏப்.13) முறையீடு செய்துள்ளார்.

இந்த முறையீடு ஏற்கப்படும் பட்சத்தில் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அல்லது புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.