மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம் : காணிப் பிரச்சினையே கொலைக்கு காரணமாம்

285 0

பலாங்கொடை – வேல்கும்புர பகுதியில் காணிப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேல்கும்புர – ராஸகல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இரு நபர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது காணி உரிமை தொடர்பிலே இவர்கள் இருவருக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த முரண்பாடு மோதலாக மாறியுள்ளதை அடுத்து இளைஞன் ஒருவன் மற்றைய நபருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலங்கொட – ராஸகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர் சந்தேக நபரான இளைஞனின் மாமா என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான 20 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ள பொலிஸார் அவரை இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.