இறுதிக்கிரியை தொடர்பில் விசேட வர்த்தமானி

428 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 என்னும் இலக்க விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.

குறித்த வர்த்தமானியில் 4ஆம் சரத்தில், 61அ பிரிவின் பிரகாரம், ‘கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடலின் தகனம்’ என்ற பகுதியில் பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

(1) அறுபத்தோராம் மற்றும் 62ஆம் ஏற்பாடுகள் எதுஎவ்வாறிருப்பினும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல், சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க –

  • (அ) ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்துக்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும் 1200 இக்குமிடையிலான பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலும்; அத்துடன்
  • (ஆ) அத்தகைய அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கிகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்திலும்,

தகனம் செய்யப்படுதல் வேண்டும்.

(2) ஆளெவரும், கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்துக்கான அவசிய கடமைகளைப் பொறுப்பேற்கின்ற ஆள்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்குக் கையளித்தலாகாது.

(3) அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலைக் கையாளுகின்ற ஆள்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீளப் பயன்படுத்தப்படற்பாலதல்லாத தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

(4) மீளபயன்படுத்தப்படற்பாலதான கருவியானது சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மையாக்கப்படுதலும் கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.

(5) பூதவுடலின் சாம்பரானது, உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம்.