பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமே உள்ளது – ருவன் விஜேவர்தன

273 0

பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமே காணப்படுகிறது. அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சுமத்துவது பொறுத்தமாகாது. எனவே தற்போதைய நெருக்கடியான சூழலை கவனத்தில் கொண்டு அரசாங்கம் சிறந்தொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பொதுத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இன்று விசேட காணொளியொன்றினை பதிவு செய்து வெளியிட்டிருக்கும் அவர் அதில் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி செலயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும்இ தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பந்தைக் கைமாற்றுவதைப் போன்று ஒருவரை ஒருவரை கூறிக் கொண்டிருப்பது இந்த சந்தர்ப்பத்தில் பொறுத்தமானதல்ல. அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு சில பொறுப்புக்கள் உள்ளன. எனவே தற்போது வைரஸ் தொற்று பரவியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பது பற்றி ஆராய வேண்டும். ஜனாதிபதி இது குறித்து ஆராய்ந்து சரியானதொரு தீர்மானம் எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.

அந்த பொறுப்பினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மீது சுமத்துவது பொறுத்தமாகாது. தேர்தலை நடத்த வேண்டிய அதிகாரம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கிறது. எனவே உரிய தரப்பினர் சரியான தீர்மான்ததை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். சுமார் 500 கோடி பொதுத் தேர்தலுக்கு செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல் ரீதியாக தம்மை மேம்படுத்திக் கொள்வதா அல்லது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதா என்று அரசாங்கமே சிந்திக்க வேண்டும்.

மக்கள் வரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளோம். எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டில் வைரஸ் ஒழிப்பிற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். எனவே இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களின் கண்ணீருக்கு மத்தியில் தீர்மானங்களை எடுக்காது சிறந்ததொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

வைரஸ் ஒழிப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கமைய சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் அதற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக அண்மைக்காலமாக ஊடகங்கள் தவறாக பிரயோக்கப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் ஊடாக போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று ஊடகங்களில் ஏனைய கட்சிகள் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறானவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்களை ஊடகங்கள் ஊடாக முடக்குவதே அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளது என்று தோன்றுகிறது.

அதே போன்று போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சிலரை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எந்த அடிப்படையில் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்று கேள்வியெழுப்புகின்றோம் என்றார்.