கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

317 0

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் வழங்கிய 29.5 மில்லியன் ரூபாயினையும்,  அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 2.8 மில்லியன் ரூபாயினையும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தனது அமைச்சுப் பதவிக்கான ஏப்ரல் மாத சம்பளத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கிவைத்தனர்.

யுனிலீவர் ஸ்ரீ லங்கா லிமிடற் 10 மில்லியன் ரூபாய், முகாமைத்துவம் தொடர்பான பட்டப் பின்படிப்பு நிறுவனம் 5 மில்லியன் ரூபாய், கிரம விமலஜோதி தேரர் பௌத்த கலாசார மத்திய நிலையம் 2 மில்லியன் ரூபாய், அத்தனகல்ல ரஜமகா விகாரை 10 மில்லியன் ரூபாய் மற்றும் மலலசேகர மன்றம் 3 மில்லியன் ரூபாய் உள்ளடங்களாக நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.