உலகில் கொரோனாவால் 1,347,803 பேர் பாதிப்பு – 74,807 பேர் உயிரிழப்பு!

234 0

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 803 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 74 ஆயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 77 ஆயிரத்து 402 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்து 249 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 16,523 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 13,341 பேர் இறந்துள்ளனர். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்காவில் 10,986 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 8,926 பேரும், பிரிட்டனில் 5,385 பேரும், ஈரானில் 3,739 பேரும், சீனாவில் 3,335 பேரும் பலியாகி உள்ளனர்.