ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு

216 0

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 வியாழக்கிழமை மீண்டும் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாளில் மாலை 4 மணிக்கு  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பரவலைக் கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

இன்று ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்கள், ஏற்றுமதிப் பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்நுழைவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.