கொரோனாவுக்கு 193 பேர் பலி – அவசரநிலை பிரகடனம் செய்த ஸ்பெயின்

334 0

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
குறிப்பாக இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 1,440 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 ஆயிரத்து 660 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியை தொடர்ந்து மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினிலும் கொரோனா புரட்டி எடுத்துவருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆயிரத்து  250 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் ஸ்பெயின் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் அத்தியவசிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.