ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் எப்போதும் ரணில் விக்ரமசிங்கவிற்காக திறந்திருக்கும் என்றும் கூட்டணியின் வெற்றிப் பயணத்திற்கு செல்ல தம்முடன் இணையுமாறு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது, இதன்பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.தே.கவின் அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான பலம் எம்மிடத்தில் உள்ளது. இதை முறியடிக்க எவராலும் முடியாது. ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
அதேவேளை ஏனைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். எதற்காகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எந்த சமயத்திலும் அர்களை பாதுகாக்க நாம் தயாராகவுள்ளோம்.
ஊழல் மோசடி கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம்” என கூறினார்.