ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பில் இன்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆவர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான காய்ச்சலால் தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோலவே ஈரானிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 1000 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கரோனா வைரஸுக்கு இன்று மட்டும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் ஆவர்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.