தலிபான் தலைவருடன் நடத்திய உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு மத்தியில் அமெரிக்கா – தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை குறித்து கத்தாரில் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “ நான் இன்று தலிபான்கள் தலைவருடன் பேசிவிட்டேன். எங்களுடைய உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது. வன்முறைகளுக்கு இடமில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். அதன்பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளார்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச்சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் நேற்று கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுக்கால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

