வங்கி கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மீட்பு!

310 0

தக்கலையில் வங்கி கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குஞ்சுகள் புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரிகோட்டை பல்லுயிர்பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

தக்கலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடத்தை ஒரு ஆந்தை அடிக்கடி சுற்றி சுற்றி வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் நேற்று கட்டிடத்தை சுற்றி பார்த்தார். அப்போது, கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆந்தை கூடு கட்டி குஞ்சு பொரித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வங்கிக்கு விரைந்து சென்று ஆந்தையை பிடிக்க முயன்றனர். ஆனால், வீரர்களை கண்டதும் ஆந்தை தப்பி சென்றது. இதையடுத்து கூட்டில் இருந்த 4 குஞ்சுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட குஞ்சுகள் புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரிகோட்டை பல்லுயிர்பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குஞ்சுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.