கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார்- சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

441 0

கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைகட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கொரோனோ வைரசுக்கு இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 89 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனாவால் 81 பேர் இறந்துள்ளனர்.
2,656 பேருக்கு புதிதாக இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 37 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீனாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த 19 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் கொரோனோ வைரசுக்கு பலியாகி இருந்தார். தற்போது ஜப்பானை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கோப்பு படம்
சீனாவை தவிர்த்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் தலா ஒருவர் கொரோனோ வைரசுக்கு பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக சீனாவிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத்தயார் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். மேலும் சீனாவின் ஹுபெய் நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.