கண்டி மாவட்டத்துக்கு முழுமையான வசதிகளைக்கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்றை அமைக்க இந்த அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
கண்டி திகன, மாபெரிதென்ன, நித்துலேமட, செனரத்வௌ ஆகிய கிராமங்களை உள்ளடக்கி மூன்றாவது முறையாகவும் போகஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இக்கிராமங்களில் பல இனங்களை, பல மதங்களை, பல கலாசாரங்களை சேர்ந்தர்வர்கள் வாழ்கின்றனர்.
எனவே, இப்படியான நிகழ்வுகள் இம்மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கும் சகவாழ்வுக்கும் அடிப்படையாக அமைகின்றன. அத்துடன், சமூகங்களுக்கு இடையில் தமது கலாசாரங்களை, பண்பாடுகளை பரிமாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கான முழு வசதிகளைக் கொண்ட தமிழ் பாடசாலை ஒன்றின் தேவை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. எமது அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்திலும் அத்தகைய இரு பாடசாலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கமைய பாடசாலை அமைப்பதற்காக கண்டி, மாபெரிதென்ன பண்ணையில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தை பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அவ்வாறு உருவாகும் பாடசாலை தங்குமிட வசதிகளுடன் கூடியதாகக் காணப்படும். நாங்கள் அதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இன்றைய அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொண்டு இப்பாடசாலை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என மேலும் தெரிவித்தார்.

