கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து

269 0

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி காரணமாக பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.

சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும்.

இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்களுக்கு விவரியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த வேண்டுகோள் காரணமாக சீனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இது, அதிர்ஷ்ட நாளில் தங்களின் திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

இதற்கிடையில் திருமணங்கள் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட சீன அரசு, இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை விரைவாகவும், அதிக கூட்டம் இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.