தமிழ் தேசிய கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்

250 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது. என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா விமர்சித்துள்ளார்.

அத்தோடு தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (1)நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க முயற்சிகள் பல முனைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனினும் அந்த முயற்சியானது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர வெறுமனே பதவி ஆசைக்காகவும் நாற்காலிகளும் உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது.

மேலும் உருவாக்கப்படும் கூட்டணியானது சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது மக்களுக்கு சேவையாற்ற கூடிய பலமான ஒரு கூட்டணியாக இருக்க வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

எனவே நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளோம் அவ்வாறு தனித்துப் போட்டியிடும் போது கொள்கை அளவில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் மேலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அதற்கும் தயாராக இருக்கின்றோம்.மக்கள் எம்மை தோற்கடித்தாலும் பரவாயில்லை நாம் கொள்கையில் உறுதியாக இருப்போம்.

தற்போதைய நிலவரத்தின்படி எமது கட்சி தனித்து போட்டியிடுவதாக இருந்தால் நான் திருகோணமலை மாவட்டத்திலும் எனது கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுவது என உத்தேசித்துள்ளோம் அதற்கான முடிவினை எமது கட்சி விரைவில் கூடி ஆராயும்.

எனவே எம்முடன் பயனிக்க விரும்பும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய தேசிய கட்சிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்ரோம்.என்றார்.