கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ரூ.100 கோடி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் உதவி

322 0

கரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வுஹான் நகரம் மூலம் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வருவதால் உலகச் சுகாதார அமைப்பு சுகாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளது.

சீனாவில் இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். வுஹான் நகரின் 1 கோடிக்கும் மேலானோர் கிட்டத்தட்ட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டு, தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக சீனாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீதி தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.