அரசாங்க ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க குறை நிரப்பு பிரேரணை-லக்ஷ்மன்

210 0

தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட மூடிய கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியகாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுவதினால் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே இவற்றை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த குறை நிரப்பு பிரேரணையை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 8 சதவீத வற் வரி நிவாரணத்தினால் சுமார் 50 நிறுவனங்களுக்கு உட்பட்ட 5555 பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டிப்பதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது என்றும் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்கான எதி திசி கடன் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கடன் வசதி கிட்டும்.