தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – ரோஹித!

269 0

தடை செய்யப்பட்ட தௌஹீத்  ஜமாத்  அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு முன்னாள்  மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக கடந்த அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. கைது செய்வதற்கு உரிய காரணிகள் இருந்தும் அரசாங்கத்தில் பதவி வகித்தவர்கள் கைது செய்யப்படவில்லை மாறாக நாடாளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக  அவர்கள்  குற்றமற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன்  மற்றும் மேல்மாகாண முன்னாள் ஆளுநர்  அஸாத் சாலி ஆகியோர் குற்றமற்றவர்களாக  கருதப்பட்டார்கள்.

தடை செய்யபபட்ட  தேசிய தௌஹீத்  ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் உள்ளதாகவும், ஒரு  பிரதேசத்தில் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பிரதேச  சபை  மறுப்பு தெரிவித்த போது பள்ளிவாசலை கட்டுமாறு  நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.

முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல தரப்பில் முறைப்பாடுகளை  முன்வைத்தோம். ஆனால் எவ்விதவிசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

நீதிபதிகள் தொடர்பாக தற்போது மாறுப்பட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே இவரது  கருத்து தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை  மேற்கொள்ள வேண்டும்” என ரோஹித அபேகுணவர்தன கூறினார்.