தென்கொரியாவில் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

339 0

தென்கொரியாவில் தங்கும் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.தென்கொரியாவின் காங்வொன் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டாங்ஹேயில் 2 மாடிகளை கொண்ட தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள அறைகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியின் 2-வது தளத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த விருந்தினர்கள் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் விடுதி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.