ஒரு புதிய அத்தியாயத்தை உதயநிதி படைப்பார்; ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன்: நாஞ்சில் சம்பத்

235 0

ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன் என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.

தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராகப் பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘பொய் பெட்டி’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது திமுக இளைஞரணி.

இந்த நிகழ்ச்சியில் ‘பொய் பெட்டி’ என்ற பெயரில் பெட்டி ஒன்று வைக்கப்படும். அதில் வரும் கடிதங்களுக்குக் கட்சி சார்ந்த பிரபலம் ஒருவர் பதிலளிப்பார். அதில் சமீபத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பேசும்போது, “ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன். இப்போது பந்தை அவரது மைதானத்தில் போட்டுவிட்டேன். இனிமேல் அவர் தீர்மானித்துக் கொள்ளலாம். எனக்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், நாஞ்சில் சம்பத்துக்கு திமுக கரை வேட்டியைப் போர்த்தினார்.

பின்னர் உதயநிதி பேசும்போது, “கரை வேட்டியைப் போட்டுக் கொள்வதும், போட்டுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். இப்போது பந்து உங்கள் மைதானத்தில் இருக்கிறது. எனக்குப் பொன்னாடை போர்த்துவதில் பெரிதாக உடன்பாடில்லை. கரை வேட்டி போடுவதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.