ராஜிதவிற்கு எதிரான சீராய்வு மனு – நீதிமன்றின் அறிவிப்பு

182 0

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவிற்கு பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த சீராய்வு மனு தொடர்பான கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சீராய்வு மனு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது இன்று (செவ்வாய்க்கிழமை) அது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜித அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தது.

அத்துடன், ராஜித்த சேனாரட்னவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதவான் பயணத் தடை விதித்திருந்ததுடன், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் வைத்திருக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபர் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை வழங்கல் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.