சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை மீளாய்வு செய்யுமாறு பீரிஸ் கோரிக்கை!

272 0

83869251_pmreuters4-720x480தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் ஜி.எல்.பீரிஸ், மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழந்துவிட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜி.எல்.பீரிஸ், பொது எதிரணியில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது அவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

ஆனால் அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த முடிவை ரத்துச் செய்தது. இந்தப் பின்னணியைக் கொண்டு எனது நீக்கத்தையும் ஆராய வேண்டும்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமைக்கு நான் சவால் விடுக்கப் போவதில்லை. ஒழுங்கை மீறிய இரண்டு உறுப்பினர்களுக்கு எதிரான இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

ஒழுக்காற்று நடவடிக்கை விடயத்தில், இரட்டை நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சித் தலைமை கடைப்பிடிக்கக் கூடாது. எனது உறுப்புரிமை நீக்கத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீளாய்வு செய்யும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.