கேரள மாநிலம் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்வதாக, பாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி உள்ளது. அங்கு, அரிய நிகழ்வாக, இந்து மத சடங்குகளுடன் ஒரு இந்து திருமணம் நடந்தது. மணப்பெண் அஞ்சு, மணமகன் சரத் இருவருமே இந்துக்கள்தான். மணப்பெண் அஞ்சு, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அதனால், தன் மகள் திருமணத்தை நடத்தி வைக்குமாறு செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் அஞ்சுவின் தாயார் உதவி கோரினார். அதை மசூதி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அத்துடன், மணமகளுக்கு 10 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்கமும் பரிசாக கொடுத்தது.
இதற்கிடையே, இந்த திருமணத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண புகைப்படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டதுடன், கேரள மாநிலம் மத நல்லிணக்கத்துக்கு எப்போதும் உதாரணமாக திகழ்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நேரத்தில் இந்த திருமணம் நடந்துள்ளதாகவும், கேரளா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.