அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

271 0

அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குராங்கொடை பிரதேத்தில் இன்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், “2018ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 இலட்சம் வாக்குகள் காணப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றியை அது வலுப்படுத்தியது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் வருகின்றது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்படி ஒரே அணியில் போட்டியிடவுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றில் அதிகாரம் இல்லை. நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட போது, இடம்பெற்றதுதான், அவருக்கும் நடந்துள்ளது.

இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று 142 ஆசனங்கள் இருந்தன. எனினும், 47 ஆசனங்கள் வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

எனினும், முதலாவது வருடத்தில் பிரதமர் மஹிந்த எனக்கு ஆதரவு வழங்கினார். அதன்காரணமாக ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்காகதான் நாங்கள் இணைந்துசெயற்படுகின்றோம்.

நாடாளுமன்றில்  2/3க்கும் அதிக பலத்தை பெற்றுக்கொடுத்து அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சந்தர்ப்பம் தாருங்கள்.

என்னிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, பொதுத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன்” என்றார்.