வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி வெண்கரம் அமைப்பினரால் கௌரவிப்பு!

277 0

ஆசியளவிலான ‘கலப்பஞ்சல்’ போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த சாதனை மாணவி இந்திரசித்து-தமிழரசி, வெண்கரம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் விழாவின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நீச்சல்-சைக்கிளோட்டம்-மரதன் ஆகிய மூன்று விதமான விளையாட்டுகளை உள்ளடக்கிய கலப்பஞ்சல் போட்டிக்கான இலங்கை அணியில் சைக்கிளோட்ட வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டுக்கான ஆசியமட்ட போட்டியில் பங்கேற்று வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பக மாணவியான தமிழரசியின் சாதனையை பாராட்டி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் சிறு தொகை பணப்பரிசும் ஊக்குவிப்பு பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட சைக்கிளோட்டப்போட்டிகளில் பங்கேற்று 2016 ஆம் ஆண்டில் 6 ஆவதாகவும், 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் 5 ந்தாவதாகவும், 2019 இல் 9 ஆவதாகவும் வந்திருந்த தமிழரசி 2018 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட சகல பிரிவினருக்குமான சைக்கிளோட்டப்போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கத்தினையும், 2019 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சகல பிரிவினருக்குமான சைக்கிளோட்டப்போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தினையும் கைப்பற்றியுள்ளார். இப்போட்டிகளில் தமிழரசி வெளிப்படுத்திய திறமைகளே கலப்பஞ்சல் போட்டிக்கான இலங்கை அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரம் கலைப்பிரிவில் தோற்றிய தமிழரசி 2ஏ, பி பெறுபேற்றினை பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினை பெற்றுள்ளார். அந்த வகையில் விளையாட்டுத்துறையில் தனது திறமைகளை வெளிப்படுத்திவரும் அதேவேளை கல்விச் செயற்பாட்டிலும் திறமையினை வெளிப்படுத்தி முன்னுதாரணமாகத் திகழும் இவரது இத்திறமைகளை பாராட்டி ஊக்குவிக்கும் முகமாகவே வெண்கரம் அமைப்பின் சார்பில் நேற்றைய பட்டிப் பொங்கல் விழாவின் போது கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.