தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு-சுரேஷ் பிரேமச்சந்திரன்

224 0
சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.

தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப் பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக் கூடியதாக உள்ளது.

மாவை சேனாதிராஜா தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பதும், அது எனது சொந்த பிரச்சினை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார். தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். இதுவே, அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது.

மாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நிறைவற்றப்படாத சில திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அத்துடன், பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.

கம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பரலிய திட்டத்தின் ஊடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.