சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளுடன் க.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

265 0

தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளைச் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளார்.நேற்று (12/01/2020) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான எ.கே.ராஜன், பி.சண்முகம், அக்பர் அலி, ஹரிபரந்தாமன் ஆகியோருடன் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளனர்.

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர் கூட்டமைப்பில் உள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பங்கேற்றுள்ளார்கள்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும், தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற ஈழ  ஆதரவு வழக்கறிஞர்கள் த.பார்வேந்தன் (மாநில செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி), ரஜினிகாந்த் (தலைவர் – மக்கள் குடியரசு கட்சி), கிருஷ்ணகுமார் (செயலாளர் – சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்), வி.இளங்கோவன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), துரை அருண் (திராவிடர் விடுதலை கழகம்), ஜிம்ராஜ் மில்டன், சுரேஷ் (நாம் தமிழர் கட்சி) பெண் மனித உரிமை போராளி வழக்கறிஞர்களான அஜிதா, தமயந்தி, செங்கொடி ஆகியோர் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கா.வி.விக்னேஸ்வரன் அவர்களுடனான இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, ஈழத்தில் உள்ள தமிழர்கள் இனி சந்திக்கபோகும் நிலைமைகள் குறித்தும், தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், ஈழத் தமிழர்களின் உரிமையை மீட்க இந்தியாவில் உள்ள அனைத்து பார் கவுன்சில்களின் ஆதரவினை திரட்டுவதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர் கூட்டமைப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.