ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் தயாராகவே இருக்கிறார்கள் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். விஜித் விஜயமுனி சொய்சா மேலும் கூறியுள்ளதாவது, “ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிட்டு, மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கவே அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. அரிசியில் விலை அதிகரித்து விட்டது. இதிலிருந்து மக்களை திசைத்திருப்பவே இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டாலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலத்தான் நாம் உணர்கிறோம்.
இவருக்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம். அவரது கொள்கைப் பிரகடனத்தை நிறைவேற்ற நாம் நிச்சயமாக ஆதரவு வழங்குவோம்.
அவருக்கு வாக்களித்தவர்கள் மட்டுமன்றி, வாக்களிக்காதவர்கள் கூட அவர் மீது எதிர்ப்பார்ப்புடன் இன்று இருக்கிறார்கள்.
அவர் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
அவரது கொள்கைப் பிரகடனத்தை வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற பெரும்பான்மையான ஆதரவினை வழங்குவோம். ஐக்கிய தேசியக் கட்சியும் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

