கல்மடு காட்டுப்பகுதியில்பல இலட்சம் பெறுமதியான மரங்கள் கடத்தல் – 7 பேர் கைது

324 0

dsc00724கல்மடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  கல்மடு காட்டுப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட சுமார்  50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலை மரக்குற்றிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்மடுநகர் பகுதியில் உள்ள விமானப்படை அதிகாரிகளால் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு   வழங்கப்பட்ட   தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபரின் விசேட குழுவினர்  குறித்த மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

இதன்போது கல்மடு காட்டுப்பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட பாலை மரங்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தறிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், மேலும் ஒரு தொகுதி பாலை மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறித்த குழுவினர்  தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர்  மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் சம்பவ இடத்தில் இருந்த 7 பேரைக் கைதுசெய்ததுடன், மரங்களை வெட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியதுடன் ஏற்றிச் செல்வதற்குத் தயாராக இருந்த ஒரு வாகனமும் மீட்கப்பட்டுள்ளது

dsc00718

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தெரிவித்தனர். இதேவேளை கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கடந்த 3 ஆம் திகதி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் வெலிகன்னவின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப்பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகர்பகுதிக்கு கொண்டுசெல்வதற்கு உடந்தையாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா்.

dsc00727

இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இதேவேளை சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தியவா்கள் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் அக்கராயன், முட்கொம்பன் காட்டுப் பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

dsc00730dsc00732