யாழில் ‘தமிழமுதம்’ நிகழ்வு ஆரம்பம்

268 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா இவ்வருடம் ‘மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நோக்கிய எழுச்சிப் பேரணியுடன் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகின.

இதன்போது, தமிழர் கலாசார – பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சிலம்பு, கரகம், பொம்மலாட்டம், புலியாட்டம், கம்படி, கரகாட்டம் மற்றும் இன்னியம் முழங்க விருந்தினர்கள் பிரதான வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், அதன் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.