ரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்ய்ய ரயில்வே இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மருதானை ரயல் நிலையத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ரயில்களில் பயணிக்கும் அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிகாட்டியுள்ளது.
அதற்கமைய, மரக்கறி வகைகள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபாவிற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கு முன்பாக கொள்வனவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியில் ஒரு கிலோகிராம் பருப்பு, 2 கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி, ஒரு கிலோகிராம் சீனி மற்றும் சிறிய டின் மீன் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மரக்கறி பொதியில் கெரட், லீக்ஸ், போஞ்சி, வற்றாழைக் கிழங்கு, பூசணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, எலுமிச்சை, பொன்னாங்கன்னி ஆகியன காணப்படுகின்றன.
இந்த திட்டத்தை ஆரம்பித்து கருத்து வெளியிட்ட ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, புறக்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

