48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த சாமியார்

309 0

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே 48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் விரதத்தை கலைத்து கொண்டு லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன்.யோகா மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரில் அவரது சொந்த இடத்தில் பத்தடி ஆழம் 10 அடி சுற்றளவு கொண்ட குழியை வெட்டி பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த குழிக்குள் தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி மவுன விரதம் இருந்து வந்தார்.

48 நாட்களாக பாதாள லிங்கேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், நவதானியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டும் லிங்கத்தை மலர்களால் அலங்கரித்தும் சிறப்பு பூஜைகள் செய்துவந்தார்.

48 நாட்கள் மேற்கொண்ட மவுன விரதத்தை இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கலைத்துக்கொண்ட காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி, லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிகழ்வை காண ஈரோடு, அந்தியூர், கோபி, ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

குழிக்குள் இருந்து வெளியே வந்த சாமியார் அதிகாலை 3 மணியளவில் பவானி கூடுதுறை சென்று நீராடி தீர்த்தம் கொண்டு வந்து ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரில் அமைந்த காசிவிஸ்வநாத லிங்கேஸ்வரருக்கு பூஜைகள் செய்தார்.

மேலும் கோவில் அமையப்பெற்றுள்ள அவ்விடத்தில் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வேள்வி நடந்தது.

இந்த பூஜையில் ஆப்பக்கூடல், அந்தியூர், ஈரோடு, கோபி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.