கிளிநொச்சியில் பொலிஸ்மீது தாக்குதல் நடாத்தியவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்

340 0

kilinochchi-police-caseகிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் இருபத்தைந்தாம் திகதி கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி அடையாள அணிவகுப்பு செய்வதற்கு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இன்றயதினமும் அடையாள அணிவகுப்பு செய்வதற்கு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், மீண்டும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.