நேபாளத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் பலி; 18 பேர் காயம்

319 0

நேபாளத்தில் சிந்துபால்சாக் பகுதியில் உள்ள அரணிகோ மலைப்பகுதிச் சாலையில் யாத்தீர்கர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள், 18 பேர் காயமடைந்தனர்.

டோலகா மாவட்டம் காளின்சோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு ஒரு பேருந்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தபூர் நகருக்கு நேற்று இரவு திரும்பினர். சிந்துபால்சாக் பகுதியில் அரணிகோ நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 80கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்று போலீஸார் காத்மாண்ட் போஸ்ட் செய்திக்குப் பேட்டி அளித்துள்ளார்கள்.

இந்த விபத்துக் குறித்து அறிந்தவர்கள், போலீஸாருக்கும், மீட்புப்படையினருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில், 18 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

போலீஸ்ஆய்வாளர் நவராஜ் நிபானே கூறுகையில், ” 18 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர், இதில் 3 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. பலியானவர்கள் விவரம், அடையாளம் குறித்து விசாரித்து வருகிறோம். இந்த விபத்து நடக்கும் போது பேருந்து குதித்துத் தப்பிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகிறோம். அதிகமான வேகம், முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டியதை விபத்துக்கு காரணமாக இருக்கும் என்று கருதுகிறோம் ” எனத் தெரிவித்தார்