தங்க பிஸ்கட்களை வெளியில் எடுத்துவர முற்பட்ட விமான நிலைய ஊழியருக்கு தண்டப்பணம்

402 0
இரட்டை குடியுரிமை உள்ள இலங்கையர் ஒருவரின் ஊடாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியில் எடுத்துவர முற்பட்ட தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தீர்வையற்ற கடைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்க பிஸ்கட்களை மின் விசிறி பெட்டி ஒன்றில் வைத்து குறித்த தீர்வையற்ற கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 100 மில்லியன் ரூபா பெறுமதியான 99 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.