பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ்

215 0

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

 

கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் காணப்படுகின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படும் அனைவரும் ஒரே குரலில் கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றால் இலகுவாக 113 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒற்றுமையாக செயற்பட்டமையினாலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.

எனினும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்மால் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது.

இந்த அரசாங்கத்துக்கும் அதே போன்றதொரு பாடத்தை கற்பிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியானது சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட ஜனநாயக கட்சியாகும். இந்த ஜனநாயக ரீதியான கட்சியை நாம் தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்கு யாராலும் தடையை ஏற்படுத்த முடியாது.

எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த பயணத்தில் செல்ல வேண்டும். அரசாங்கத்துக்கு தேவையான வகையில் எம்மால் செயற்பட முடியாது.

அமைச்சர்களானாலும் பாராளுமன்ற உறுப்பினர்களானாலும் அரசாங்கத்தின் ஒழுங்கு பத்திரத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் எம்மை விமர்சிப்பதையும், கருத்துக்கள் வெளியிடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைவரையும் இணைத்து கொண்டு முன்னோக்கிய பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். கட்சி உறுப்பினர்கள் பலரையும் உள்ளடக்கி ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கட்சியின் அடுத்த தலைமைத்துவம் குறித்தும் பொதுத் தேர்தல் குறித்தும் தீர்மானமெடுக்கும் பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.