இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் : நஸீர்

299 0

13957569_1874883259401569_854126037_nஇந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(03) இடம் பெற்ற கல்வியல் கல்லூரிகளை பூர்த்தி செய்த நிலையில் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாகாண பாடசாலைகளுக்குள் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வெளி மாவட்டங்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட 310 பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலும் நியமனம் வழங்கி வைக்கப்பட்டள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பயனாக வேறு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்துச்செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 248 நியமனங்கள் பெண்களாகவும் 62 பேர் ஆண்களாகவும் உள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

தொடர்ந்தும் முதலமைச்சர் உரையாற்றுாயில்,

பாரிய அழிவுகளை சந்தித்த இந்த நாடு, அதிலிருந்து பாடம் கற்று இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்காவிட்டால், இந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்.

இந்த நிலையில், எந்தவித தாமதமும் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு எடுக்கப்பட்டு, அதனை அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக எவரும் இருக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, சத்தியபிரமாணம் செய்துவிட்டு பின்னர் அதனை வழங்குவதற்கு மறுக்க முடியாது. அரசியல் இழுத்தடிப்பு இந்த நாட்டிற்கு நல்லதல்ல. இனப்பிரச்சினைக்கான முன்னெடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும், 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் உண்மையாகவே எங்களுக்கு இருந்திருந்தால், ஆசிரியர்களாகிய நீங்களும் வெளிமாகாணங்களில் அலைந்து திரிந்து இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

இதேவேளை, இந்த மாகாண சபையை முன்னர் நிர்வகித்தவர்களின் அசமந்த போக்கே ஆசிரியர்களை மேலும் சிரமப்பட வைத்தது. தற்போது கடந்த ஒரு வருட காலமாக நாம் தொடராக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றியயை கொண்டு இன்று உங்களை கிழக்கு மாகாணத்திலேயே கிட்டிய இடங்களில் நியமித்திருக்கின்றோம்.

எமது நிர்வாகக் காலத்திலே இந்த மாகாணத்தில் ஆசிரியர் பற்றாகுறை இல்லாது நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். கடந்த கால மாகாணசபை ஆட்சியாளர்களால் விடப்பட்ட நிர்வாகத் தவறுகள் எமது தோள்களை அழுத்தியுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை பரீட்சைகள் இன்றி வழங்கவும் நாம் உரிய ஒழுங்குகளை செய்துள்ளளோம். கிழக்கு மாகாண எதிர்கால சந்ததியின் கல்வி ஆசிரியர்களாகிய உங்கள் கைகளிலேயே உள்ளது. எனவே, உங்கள் கடமைகளை சிறப்பாக செய்து இந்த மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற உதவுங்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா, சிப்லிபாரூக், ஞா.கிருஸ்ணபிள்ளை, புஸ்பராஜா ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.