அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு – வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

210 0

அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்த கட்சியில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஐகோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்காக நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது. இதில் அ.தி.மு.க., இன்னொரு கட்சி மற்றும் சிலரும் ஆட்சேபனை தெரிவித்தார்கள். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தார்கள். ஆட்சேபனைகளுக்கு, நாங்கள் உரிய விளக்கத்தை கொடுத்தோம். இதனை ஏற்று தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ நகல் நாளை (திங்கட்கிழமை) கையில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.