இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்தனர்!

206 0

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் 6 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து வலியுறுத்தினர்.

யாழ்ப்பாணம் கல்வி வலய வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆசிரிய இடமாற்றப் பட்டியலில் இடமாற்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆசிரியர்களே இவ்வாறு மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆசிரியர்கள்,

“பின்தங்கிய பிரதேசங்களில் 6 ஆண்டுகளுக்கு மேலாக சேவைக்காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், எமது சொந்த இடங்களிற்கு வருவதற்காக இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தோம்.

இடமாற்றம் நிராகரிக்கப்பட்ட விபரக் கோவையில், ஆளணி பற்றாக்குறை இல்லை என காரணம் காட்டி, இடமாற்றத்தை நிராகரித்துள்ளனர்.

அதனடிப்படையில் 40 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்தோம். எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியை நிறைவு செய்தால், பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

அவ்வாறு பார்த்தால், நாங்கள் 7 ஆண்டுகளைத் தாண்டியும் கடமையாற்ற வேண்டியதாக இருக்கும். எனவே, வெளிமாவட்டத்தில் கடமையாற்றாத ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ளார்கள். அவர்களை அந்த இடத்திற்கு இடமாற்றத்தை வழங்கிக் கொண்டு, எமக்கான இடமாற்றத்தை தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தோம்.

இவ்வாறு பின்தங்கிய பிரதேசமான, மடு, துணுக்காய், மன்னார், உள்ளிட்ட பல்வேறு வலயங்களைச் சார்ந்த 200 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எமக்கான இடமாற்றத்தை வழங்க வேண்டும் வேண்டுகோள்விடுக்கின்றோம் – என்றனர்.