‘இலங்கையர் என கைகோர்க்க வாருங்கள்’ ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறோம் மு.காவின் பிரதிதலைவர் நஸிர் அஹமட் வாழ்த்து

215 0

‘இலங்கையர் என கைகோர்க்க வாருங்கள்’ என சிறுபான்மை சமூகங்களுக்கு அழைப்புவிடும் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தேர்தல் முடிவு நாட்டு மக்களுக்கு நல்லதொரு செய்தியை சொல்லியுள்ளது குறிப்பாக இருதுருவநிலை ஏற்பட்டுள்ளமை நிரூபனமாகியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

எனினும் இன்றைய தினம் அவர் பதவி ஏற்ற வைபத்தின்போது தெரிவித்துள்ள கருத்து மிகச் சிறப்பான ஒன்றுமாகும். அதாவது “ இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த மக்களால் மாத்திரம் வெற்றிபெற முடியும் என நான் நம்பியபோதும் அந்த வெற்றியின் பங்காளிகளாக தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். ஆனாலும் அவர்கள் அதனை புறக்கணித்தனர். எனினும் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் ஜனாதிபதி என்ற நிலையில் இனிவரும் காலங்களில் நாம் இலங்கையர் என தொடர்ந்து பயணிக்க என்னுடன் கைகோர்த்து செயற்பட முன் வாருங்கள் என அவர் அழைத்திருப்பது வரவேற்கத் தக்க அம்சமாக இருக்கின்றது.

சிறுபான்மை மக்களை அனுசரித்து அவர்களது அபிலாஷைகளை நிறை வேற்றும் வகையில் அவர் தமது பணிகளை தொடருவாராக இருந்தால் அனைத்து சமூகங்களும் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் ஒருதலைவராக அவர் எதிர்காலத்தில் சிறப்பு பெறுவார் என்பது திண்ணம்.

சிங்கள சமூகம் பெருவாரியாக ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தலைவர் என்ற ரீதியில் இது காலவரையில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை புதிய ஜனாதிபதி முன்வைப்பாராக இருந்தால் அதனை சிங்களச் சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

எனவே அனைத்து சமூகங்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் சிறந்தொரு முன்னுதாரணம் உள்ள ஆட்சியை அவர் முன்னெடுத்து செல்ல வேண்டும் என இவ்வேளையில் எமது சமூகத்தின் சார்பாக வாழ்த்துவதில் பெருமகிழ்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.