பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும் சாதகமாகவோ, அவற்றுக்கு அனுசரணை வழங்கும் விதமாகவோ செயற்படவில்லை. அத்தோடு நாம் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தவில்லை. எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.
உண்மையில் எமது நாட்டிலுள்ள அனைத்து சிங்களவர்களையும் ஒன்றுதிரட்டி, சிங்கள அரசை வலிமைப்படுத்தும் அதேவேளை, ஏனையோரும் வாழத்தகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே பொதுபலசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
ஏனெனில் தற்போது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டார் அவர்கள் செல்வதற்கு வேறு நாடுகள் இருக்கின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் நாம் பூகோள ரீதியில் சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றோம். எனவே எமக்கென இருக்கின்ற இந்த நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

