திருட்டு கும்பலின் கையில் நாடு மீண்டும் செல்லக் கூடாது! -யாழில் சந்திரிக்கா

293 0

எமது நாட்டில் உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தது.அந்த ஆட்சியில் கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள், போன்ற அராஜக  ஆட்சியே நடைபெற்றது.

 

தற்போதைய தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை 1 வருடத்துக்குள் தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். எனவே அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்புக்களை நடத்துவதற்காக இன்று(12) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்திரிக்கா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு கோரி மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டு போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தது.இவர்களின் அராஜக ஆட்சியில் வெள்ளைவான் கடத்தல்கள்,படுகொலைகள்,நிதி மோசடிகள்,கொமிஷன்கள் என பல குற்றங்கள் நடைபெற்றன.அவர்களின் ஆட்சியில் மக்கள் நீங்கள் எந்தளவு பாதிப்புகளை எதிர் நோக்கினீர்கள் என்பதை அறிவீர்கள்.இந்த அராஜக ஆட்சிக் குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் குடும்ப ஆட்சிக்கு இனியும் மக்கள் இடம் கொடுக்க கூடாது.

நாட்டில் ஆ்டசி மாற்றம் ஏற்பட்டு ராஜபக்சவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் அதிகாரம் செல்லுமாயின் நாட்டில் மீண்டும் கடத்தல்கள், படுகொலைகள், இடம்பெறும்.அதுமட்டுமல்லாது ராஜபக்சவின் குடும்பத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் கடத்தப்படலாம் படுகொலை செய்யப்படலாம்.சிலவேளைகளில் திட்டமிட்ட வகையில் சிறைகளில் அடைக்கப்பட்டு பழிவாங்கப்படுவார்கள்.இந்த திருட்டு கும்பலின் கையில் நாடு மீண்டும் செல்லக் கூடாது.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசாவினை தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும்.மகிந்த குடும்பத்தின் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இவரது ஆட்சியில் ஜனநாயகம் இருக்கும்.இதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆட்சிக்கு வந்து 1 வருடத்தில் தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். எனவே தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.