ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரையிலும் 3ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிகளவிலான முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிற்கே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தவகையில் மாவட்ட தேர்தல் முகாமைத்துவ நிலையத்திற்கு 86 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 19 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் போது சட்ட மீறல்கள் தொடர்பில் 102 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பிலான ஏனைய சட்ட மீறல்கள் 03 உம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கடந்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையில் 3319 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 2336 முறைப்பாடுகளும் , தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 983 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 3189 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பிலான ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் 105 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ள நிலையில் , தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
பெப்ரல் அமைப்பு
அதேவேளை , சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பிற்கு மாத்திரம் இன்று காலை 10.30 மணிவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 505 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 471 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும்.
அவற்றில் 39 வன்முறை சம்பவங்களும் , தேர்தல் சட்ட மிறல்கள் தொடர்பில் 47 முறைப்பாடுகளும் கிடைத்துள்ள அதேவேளை , 21 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

