மூளை நரம்பியலாளர், நரம்புசார் தத்துவவியலாளர், நரம்புசார் அழகியலாளர், கலை விமர்சகர் என்று பல பரிணாமங்கள் கொண்டவரும் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவருமான விளையனூர் எஸ்.ராமச்சந்திரனின் ‘தி டெல் டேல் ப்ரெய்ன்’ புத்தகத்தை (‘வழிகூறும் மூளை’ என்று பாரதி புத்தகாலயத்தால் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது) படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு: ‘எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் உள்ளது.’ ஜனவரி புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக ஒரு புத்தகக் கடைக்கு முன் விளையனூர் எஸ்.ராமச்சந்திரனைப் பார்த்தபோது அது மேலும் உறுதிப்பட்டது.
பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை, ‘நரம்பியலின் மார்க்கோ போலோ’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல், உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மருத்துவம் படித்த சகாக்களால் ‘சென்னைப் பையன்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுபவர்.
பார்வை உணர்வு, ஆட்டிஸம், பொய்த்தோற்ற உறுப்புகள் (ஃபேண்டம் லிம்ப்ஸ்) சார்ந்து தனது ஆராய்ச்சியின் மூலமும் சிகிச்சை வழியாகவும் இவர் முன்வைத்த கண்டுபிடிப்புகள் தனித்துவமானவை. மனித மனத்தின் செயல்பாடு குறித்து அசாத்தியமான உள்ளுணர்வும், புதிரான எண்ணற்ற நரம்பியல் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்த அனுபவங்களையும் பெற்றவர்.
ராமச்சந்திரனின் ‘எமர்ஜிங் மைண்ட்’ (‘உருவாகும் உள்ளம்’, தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியீடு), ‘டெல் டேல் ப்ரெய்ன்’ ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை. இந்திய அரசமைப்பை எழுதிய குழுவினரில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பேரனான ராமச்சந்திரனுக்குத் தற்போது 68 வயது.
சென்னை வந்திருந்தவரை நேர்கண்டபோது, பல துறைகள் சார்ந்த அவரது அறிவும் உள்ளுணர்வும் தெறித்த அவரது உரையாடலில் நமக்கு ஒரே நேரத்தில் அறிதலின் ஆனந்தமும் அறிய முடியாததன் துயரமும் சேர்ந்து கவிகின்றன. ஒருகட்டத்தில் அவரும் உரையாடலின் ஓர் உச்சத்தில் பகிர இயலாததன் தத்தளிப்பில் தனிமையில் நிற்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து…
அறிவியல் மீதான உங்கள் ஈர்ப்பை ‘பிள்ளைப் பிராயத்து வசீகரம்’ என்று உங்கள் நூலில் சொல்லியுள்ளீர்களே?
மனித குலத்தின் தோற்றம் குறித்த கேள்விகளால் அறிவியலாளர்கள் முதல் சமயவியலாளர்கள், தத்துவவாதிகள் வரை ஈர்க்கப்பட்டுள்ளனர். அந்தக் கேள்வியிலிருந்துதான் எனது தேடலும் தொடங்கியது. சென்னையில் எனது பள்ளிப் பருவத்திலேயே அறிவியலுடனான காதல் உறவு தொடங்கிவிட்டது. இயற்கை நிகழ்வுகள் மீது தொடர்ந்த ஈடுபாடு கொண்டிருந்தேன்.
அடிப்படை அறிவியலில்தான் எனக்கு ஈடுபாடு இருந்தது. எனது சிந்தனைப் பாணியிலும் எனது ஆய்வு நடத்தும் போக்கையும் அதுதான் நிர்ணயித்தது. கருத்தாக்கரீதியில் எளிமையாக இருக்கும், வீட்டில் செய்து பார்க்கக்கூடிய எளிய பரிசோதனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். ஒரு சோதனையின் வழிமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
உயர் தொழில்நுட்பம் என்னை அலுப்படையச் செய்வது. எளிமையான கருவிகள், எளிமையான கேள்விகளால் நான் ஈர்க்கப்பட்டேன். கலிலீயோ கற்களை மேலிருந்து தூக்கிப்போட்டுப் பரிசோதித்ததை, முப்பட்டகங்களைக் கொண்டு ஒளியின் இயல்பை நியூட்டன் பரிசோதித்துப் பார்த்ததை எந்தச் சிறுவரும் செய்து பார்க்க முடியும். எனது அறிவியல் என்பது கேள்விகள் அடிப்படையிலானவை. கற்பனைதான் அறிவியலை உயிர்ப்புடன் வைத்திருப்பது. ஆனால், கற்பனையின் இடம் அறிவியலில் குறைந்துவருகிறது.
இன்றைய அறிவியலில் கேள்விகளுக்கும் கற்பனைகளுக்கும் முக்கியத்துவம் குறைந்து, முறையியலுக்கு அதிக முக்கியத்துவம் வந்துவிட்டதா?
ஆமாம். முறையியல் அவசியம்தான். தொலைநோக்கியின் அறிமுகம்தான் சூரியக் குடும்பத்தின் மையம் பூமி என்ற கருத்தையே மாற்றியது. முறையியல், உயர் தொழில்நுட்பங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் சிந்தனை, கற்பனையின் இடத்தை இடம்பெயர்க்கும் அளவுக்கு அதன் மீது அதிக அளவில் நாட்டம் தேவையில்லை.
ஒரு எட்டு வயதுக் குழந்தையிடம் கத்தியைக் கொடுத்துப் பார்த்தால் என்ன செய்யும்? பார்க்கும் எல்லாவற்றையும் வெட்டும். இப்படித்தான் தொழில்நுட்பத்தைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். நோயாளியின் மருத்துவ வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு அவரை முழுமையாகக் கவனியுங்கள் என்றே எனது மாணவர்களிடம் சொல்கிறேன்.
நெருங்கிக் கவனிப்பதன் மூலமும், முறையாக உடலைப் பரிசோதிப்பதன் மூலமுமே ஒரு நோயாளிக்கு இருக்கும் பிரச்சினையை 90% அறிந்துகொள்ள முடியும். உங்கள் உள்ளுணர்வை நிரூபிப்பதற்கு வேண்டுமானால் ஆய்வகச் சோதனையைப் பரிந்துரைக்கலாம்.
துண்டிக்கப்பட்ட உறுப்புகளில் வலியை உணரும் நோயாளிகளுக்குத் தீர்வை அளிக்கும் விதத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிகள், காது குடையும் குச்சிகளை வைத்து ‘பொய்த்தோற்ற உறுப்பு’ (ஃபேண்டம் லிம்ப்) என்ற எளிமையான சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளீர்கள். அது குறித்து?
அழகியல்ரீதியாக எளிமையின் நேர்த்தி என்னைக் கவர்கிறது. ஷேக்ஸ்பியர் ஒரு வரியில் வாசகருக்குச் சொல்வதை, ஒரு சாதாரண எழுத்தாளர் வெளிப்படுத்துவதற்கு ஒரு புத்தகத்தையே செலவிட வேண்டியிருக்கும். அறிவியலின் அழகியல் அம்சம் தற்போதைய நாட்களில் மதிக்கப்படுவதே இல்லை. மூளை நரம்பியல் துறையைப் பொறுத்தவரை ஒரு வல்லுநரின் கண்டுபிடிப்பு அவரது காலத்திலேயே செயல்முறைக்கு வருவது மிகவும் அரிதான நிகழ்வு.
உங்களது சில கண்டுபிடிப்புகள் உங்கள் காலத்திலேயே மூளை நரம்பியல் மருத்துவத்தில் சிகிச்சைக்குப் பயன்பட்டுவருகிகின்றன அல்லவா?
என்னுடைய சில கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. என்னுடைய ஆராய்ச்சியின் செயல்திட்டங்கள் நான்கு. முதலாவது, மூளையில் நடப்பதாக நோயாளி சொல்வதன் நிலையைத் தெரிந்துகொள்வது. ஒரு மாயத்தோற்றமோ, ஒரு அழைப்போ, ஒரு குறைபாடோ உணரப்படுகிறதென்றால், அது என்னவாக நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வது மூளையைப் பொறுத்தவரையில் அத்தனை எளிமையான விஷயம் அல்ல. இரண்டாவது, மூளையில் அது தொடர்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவது. மூன்றாவது, அதன் விளைவுகள் என்னவென்பதைக் கண்டறிவது. நான்காவதுதான் அதற்கு என்ன சிகிச்சை என்பது.
பார்த்தல் மற்றும் அறிதல் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில், உலகத்தை நாம் பார்த்துப் புரிந்துகொள்வது என்பது மிகவும் சுலபமான விஷயம்போலத் தோன்றுகிறது என்கிறீர்கள். மூளையில் விபத்தோ சேதமோ நடக்கும்போதுதான் ஒரு பெரிய ஒழுங்கில் சிக்கல் நேர்கிறது. மூளைப் புறணியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் ஒருங்கிணைப்பு நடக்கும்போதுதான் காட்சி என்பது நம்மில் நிகழ்கிறது. இப்பின்னணியில் பார்க்கும்போது இத்தனை பெரிய ஒழுங்கில்தான் நமது வளர்ச்சி நடந்துள்ளது என்பது விந்தை இல்லையா?
பிரச்சினைகளோ விபத்துகளோ நேர்ந்தவர்களின் மூளைகள்தான், இயல்பான மூளையில் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள உதவுகின்றன. உதாரணத்துக்கு, மூளையில் சேதமுற்ற ஒருவர் தனது புஜங்களை இன்னொருவருடையது என்று உணர்கிறார். அப்போதுதான் பிரக்ஞையின் செயல்பாடுகள் எத்தனை படிகளைக் கொண்டது என்பதையும் அது எத்தனை சிக்கலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.
முழுமையடைந்த ஒரு தயாரிப்பாக மனித வளர்ச்சியைப் பார்க்கும்போது மிகவும் விந்தையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு அறிவியலாளனாக இதன் பின்னணியில் கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரசவ வலியில் இருக்கும் பெண்ணையோ, ரத்தப் புற்றுநோய்ப் பிரிவில் இறந்துகொண்டிருக்கும் குழந்தையையோ பார்த்த அனுபவம் கொண்ட யாரும் இந்த உலகம் நமது நன்மைக்காகவே படைக்கப்பட்டது என்று நம்ப மாட்டார்கள்.
ஆனாலும், மனித உயிர்களாக நாம் பணிவோடு ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். மூளையையும் மூளை உருவாக்கும் பிரபஞ்சப் பெருவெளியையும் எத்தனை ஆழமாக நாம் புரிந்துகொண்டாலும், நமது தோற்றம் குறித்த கேள்விகள் அனைத்தும் மனிதரிடம் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
தன்னுணர்வுதான் மனிதனுடைய சிறப்புப் பண்பு என்கிறீர்கள்?
அதுதான் நம்மை மனிதனாக்குகிறது. அத்துடன் வெறுமனே மனிதனுக்கும் மேலாக ஆகும் ஆசைகொள்ள நம்மைத் தூண்டுவதும் தன்னறிவுதான். அறிவியல் நம்மை வெறும் விலங்குகள் என்கின்றன. ஆனால், நம்மால் அப்படியே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாம் விலங்குகளின் உடல்களுக்குள் மாட்டிக்கொண்ட, என்றென்றைக்குமாக அந்த நிலையைக் கடப்பதற்கு ஏங்கும் தேவதைகளாக உணர்கிறோம். மனிதனின் ஆதாரமான இக்கட்டு அதுதான்.
மனம் மனம் என்று பேசுகிறீர்களே அது எங்கே இருக்கிறது என்று யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தன் உளவியல் பேராசிரியரிடம் கேட்டிருக்கிறார்… ஒரு நரம்பியலாளராக உங்களைக் கேட்கிறேன். மனம் எங்கே இருக்கிறது?
மனம் என்று மூளையைத்தான் சொல்கிறோம். இதயத்தை உணர்ச்சிகளின் களனாகப் பார்க்கிறோம். கால்சியம் அயனிகள், பொட்டாசியம் அயனிகள், பத்தாயிரம் கோடி நியூரான்களின் பரிவர்த்தனையால் உணர்வுவினைகள் நடக்கும் மூன்று பவுண்டே எடையுள்ள கொழகொழப்பான ஜெல்லியில்தான் மனித வாழ்க்கையின் அத்தனை வண்ணமிக்க நாடகங்களும் நடக்கின்றன.
மனம், இதயத்தையும் (இதயம் என்ற உறுப்பை அல்ல) உணர்ச்சிகளையும் வண்ணங்களையும் நுண்ணுணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளதென்று சொல்லலாம். அடிப்படையிலும் அடிப்படையான கேள்விகளுக்குப் போகும்போது புதிரே மிஞ்சுகிறது. வைரஸ் உயிருள்ளவற்றின் சில பண்புகளையும் உயிரற்றதன் சில பண்புகளையும் கொண்டுள்ளன. மனமும் அப்படித்தான்.
மூளைக்கும் மனத்துக்கும் உள்ள உறவைச் சொல்வதற்கான மொழி இல்லாததுதான் பிரச்சினை. அதனால்தான், அந்த உறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் ஆழ்மனம், நனவிலி என்றெல்லாம் பிரித்துப் பிரித்துப் பேச வேண்டியிருக்கிறது. வலி, நனவிலி நிலையில் நிகழாமல் இருப்பதேன்? நாம் ஏன் வலியால் துயரப்படுகிறோம்? வலிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாகவே நினைக்கிறேன். வலி ஆத்திகர்கள், நாத்திகர்கள் இரண்டு பேரையுமே ஏன் வருத்த வேண்டும்?
போலச்செய்யும் அதே ஆடி நியூரான்கள்தான் பிறரைப் பார்த்து அனுதாபம் கொள்ளவும் பரிணாமம் பெற்றனவா?
செயலுக்கு ஒரு நியூரான் படை செயல்படுவதைப் போல, ஸ்பரிசத்துக்கும் ஒரு நியூரான் படை இருக்கிறது. யாரோ ஒருவர் என்னைத் தொட்டால் மூளையின் புலனுணர்வுத் தொகுதிப் புறணியில் இருக்கும் நியூரானில் மத்தாப்பூபோல எரியும். நாம் பார்க்க இன்னொரு நபரை யாரும் தொட்டாலும் அதே நியூரான் எரியும். இன்னொரு நபர் தீண்டப்படும்போதும் அதை அந்த நியூரான் உணர்கிறது.
ஆனாலும், தீண்டப்படுவது இன்னொரு நபர் என்ற தெளிவும் இடைவெளியும் நமக்கு இருக்கிறது. ஏனெனில், நமது தோலில் தொடுதலையும் வலியையும் உணரும் அறிமானிகள் நமது மூளைக்கு, ‘கவலை வேண்டாம். தொடப்படுவது இன்னொரு நபர். அதனால் பரிவுணர்வுகொள்’ என்று தகவல் தந்துவிடுவதால் நாம் குழம்புவதில்லை. ஆனால், நீங்கள் எனது கரத்தை அகற்றிவிட்டீர்களென்றோ, வெறுமனே என் கரத்தை ஊசி போட்டு மரக்கச் செய்துவிட்டீர்களென்றோ வைத்துக்கொள்ளுங்கள்.
அப்போது உங்கள் கையில் ஒருவர் ஊசி வைத்துக் குத்துவதைப் பார்த்தால் போதும் நான் அலறுவதற்கான சாத்தியம் உண்டு. ஏனெனில், அங்கே நான் – நீங்கள் என்ற பேதம் போய்விடுகிறது. அப்படி அலறவைக்கும், இன்னொருவரின் மீது பரிவு கொள்ளவைக்கும் நியூரான்களை நான் ‘காந்தி நியூரான்கள்’, ‘தலாய் லாமா நியூரான்கள்’ என்றும் அழைக்கிறேன்.
எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் இருக்கிறதென்று சொல்கிறீர்களா?
உங்களை இன்னொரு நபரிடமிருந்து வேறுபடுத்துவது உங்களது தோல்தான். அந்தத் தோலை அகற்றிவிடும்போது உங்களுக்கும் இன்னொரு நபருக்கும் இடையேயான இடைவெளி அகன்றுவிடுகிறது. கீழைத்தேயத் தத்துவங்களின் அடிப்படையே இதுதான். அதாவது, சுதந்திரமான தனித்த சுயம் என்ற ஒன்று கிடையாது.
ஒரு நபர் இன்னொருவரின் வலது கையைத் தொடுகிறபோது, வலது கையை இழந்த ஒரு மனிதரின் செயற்கை அங்கத்தில் அந்தத் தொடுகையை உணர முடிகிறது. இதைச் சாத்தியப்படுத்துவது தோல் என்ற இணைப்புதான். நீங்கள் இணையம் மூலமாக, ஃபேஸ்புக் மூலமாக மட்டும் இணைப்பில் இருக்கவில்லை. நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த அறையில் நியூரான்கள் சங்கிலித் தொடராகத் தங்களுக்குள் ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருக்கின்றன.
ஆட்டிஸத்துக்குக் காரணம் இந்த ஆடி நியூரான்களின் பற்றாக்குறைதான் என்பது உங்களது கருத்து இல்லையா?
ஆட்டிஸம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் ‘தனிமை’. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூக வாழ்க்கையிலிருந்து உள்ளிழுத்துக்கொண்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறர் மீது உணர்வுரீதியான பரிவு இருப்பதில்லை; இன்னொருவரின் கருத்துநிலையை அவர்களால் ஏற்றுப் புரிந்துகொள்ள இயலாது. குழந்தைகளுக்கென்ற தனித்துவ குணமான பாவனை விளையாட்டு, ஆட்டிஸக் குழந்தைகளுக்குச் சாத்தியமானதல்ல.
ஒரு கரடி பொம்மையை மாணவராக்கி, டீச்சர் விளையாட்டை ஆட்டிஸக் குழந்தைகள் விளையாட முடியாது. அதற்கு அந்தக் குழந்தைகள் தங்களை ஆசிரியராகப் பாவித்துக்கொள்ளுதல் அவசியம். இவையெல்லாம் ஆடி நியூரான்களுடன் தொடர்புடையவை. சீராகப் பேச முடியாத குறைபாட்டையும் ஆட்டிஸக் குழந்தைகளிடம் நாம் காண முடியும். இப்படித்தான் ஆடி நியூரான்களில் இருக்கும் குறைபாடு ஆட்டிஸத்துக்கு அடிப்படையாக இருக்கலாம் என்ற புரிதலுக்கு வந்துசேர்ந்தோம்.
ஆடி நியூரான் அமைப்பு முற்றிலும் குறைபட்டுவிட்டதா, அதன் செயல்பாடுகள் கொஞ்சம் இன்னும் மிச்சமிருக்கிறதா என்பதே கேள்வி. அப்படியாக அதன் செயல்பாடு கொஞ்சம் மிச்சம் இருக்கும் நிலையில், ஆட்டிஸக் குழந்தைகளிடம் இருக்கும் தன்னிச்சையான உடல் செயல்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் வழியாக, ஆடி நியூரான்களின் செயல்பாட்டைத் துரிதப்படுத்த முடியுமா என்று பார்க்கலாம். ஆனால், இவையெல்லாம் இன்னும் சோதனை நிலையிலேயே இருக்கின்றன.
உளவியலை நரம்பியல் இடம்பெயர்க்கும் வாய்ப்பு உள்ளதா?
நரம்பியலால் உளவியல்ரீதியாக மனத்தில் நடக்கும் பல்வேறு அம்சங்களைப் பற்றி மேலும் விளக்க முடியும். வலி ஏன் இருக்கிறதென்பது இதுவரை விளக்கப்படவே இல்லை. ஏன் வலி என்பது வலியுணர்வைத் தர வேண்டும். உங்கள் கையில் நான் குத்தினால் ஏன் அது தகவலாக மூளைக்குச் சொல்லப்படக் கூடாது? ‘அனுபவம் ஏ’, ‘அனுபவம் பி’ என்று ஏன் வெறும் தகவலாக மூளைக்கு அது பரிமாறப்படவில்லை?
நரம்பியல்ரீதியாக மூளைக் குறைபாடுகளைத் தீர்ப்பது இன்று எந்த அளவுக்குச் சாத்தியமாகியுள்ளது?
மருந்துகள், மருத்துவத் தலையீடு வழியாகச் சிலவற்றைக் குணப்படுத்த முடிகிறது. வாத நோய் வந்தவர்களில் சிலருக்குக் கண்ணாடிப் பெட்டி சிகிச்சை வழியாக மறுநிவாரணம் அளிக்க முடிகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சை பலனளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட மூளையில் உள்ள சில இணைப்புகளைத் தற்காலிகமாகச் சரிசெய்ய முடிகிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட மொத்த பகுதியைச் சரிசெய்வது இன்னமும் சாத்தியமாகவில்லை. எனினும், எதிர்காலத்தில் இதையெல்லாம் சரிசெய்வதற்கான பெரும் வாய்ப்புள்ளது. ஒரு காலகட்டம் வரை கலையும் அறிவியலும் இருவேறு துருவங்களாகப் பார்க்கப்பட்டிருக்கின்றன.
மனித மூளையில் கலை அனுபவம் எப்படி நிகழ்கிறது என்பதை நரம்பியல்ரீதியாக விளக்குபவர் நீங்கள். அந்தப் பின்னணியைச் சொல்லுங்கள்…
நடத்தைசார் நரம்பியல், பார்வை, காட்சி நோக்கு ஆகியவற்றில்தான் முதலில் எனது ஈடுபாடு இருந்தது. 1994 வரை காட்சிக் கலைகளை நான் தீவிரமாக அணுகியதில்லை. அழகிய படங்களை, சிற்பங்களைப் பார்த்துக் கடந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். கலை வரலாற்றியலாளர் ஜூலியா கெண்டி எடுக்கும் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கிய பின்னர், காட்சி அழகியல் தொடர்பாக ஆழமாக ஆராயத் தொடங்கினேன்.
அதன் பிறகு, சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது சமயம் கிடைக்கும்போதெல்லாம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனேன். எனது மேற்கத்தியக் கல்வி காரணமாக சிறுவயதில் நான் பார்த்த இந்தியக் கோயில் சிற்பங்களைச் சமயம் சார்ந்த கலையாகவே அதுவரை பார்த்திருந்தேன். அந்தப் பார்வை சென்னைப் பயணத்தின்போது மாறியது.
மேற்கு நாடுகளிலோ இதுபோன்ற சிற்பங்கள் அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும்தான் இருக்கும். ஆனால், இங்கேயோ அன்றாட வழிபாடு, இசை, நடனத்தோடு அந்த சிற்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. கலை எங்கே முடிகிறது, அன்றாட வாழ்க்கை எங்கே தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பது இங்கே சிரமம். நான் இங்கிலாந்து திரும்பிய பின்னர், நான் பார்த்த சிற்பங்களும் ஓவியங்களும் என்னைத் துரத்தத் தொடங்கின. சமயம் சார்ந்த படிமங்களாக அல்லாமல், கலையுச்சம் நிகழ்ந்த படைப்புக்களாக அவை எனக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
சில படைப்புகள் மூளையில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்னவென்று யோசிக்கத் தொடங்கினேன். கலை, படைப்புச் செயல்பாட்டில் அறிவியல்பூர்வமான அம்சம் பத்து சதவீதம் உள்ளது. அந்தப் பகுதியைத்தான் என்னைப் போன்ற நரம்பியலாளர்கள் விளக்க முயல்கிறோம். நரம்புசார் அழகியல் (நியூரோஏஸ்தடிக்ஸ்) என்று அதைக் குறிப்பிடுகிறோம். கலையின் விதிகள் அல்ல அவை என்பதை இங்கே தெளிவுபடுத்திவிடுகிறேன்.
செயற்கை அறிவுத்திறன் துறை மேம்பாடு அடையும் நிலையில், மூளையை இறந்துபோகாமல் எப்போதைக்குமாக வாழவைப்பது சாத்தியமா?
மூளையை இறந்துபோகாமல் எப்போதைக்குமாக வாழவைப்பது இன்னும் 10,000 ஆண்டுகளில் சாத்தியமாகலாம். மனித மூளையின் நுட்பமான பின்னல், செயல்பாடுகள் அத்தனையையும் நாம் தெரிந்துகொள்ளும்போது அது நடக்கும். ஒரு நரம்பியலாளர், நமது மூளையை, அதற்கான சத்துப்பொருட்கள் அடங்கிய ஒரு தொட்டிக்குள் இட்டு இறவாமல் பராமரிக்க முடியலாம்.
ஆயிரக்கணக்கான மின்வாய்கள் (எலெக்ட்ரோடு) மற்றும் குறிப்பிட்ட குணத்திலான மின் பாவனைகள் வழியாக, நமது மூளையைச் சிந்திக்க வைக்கவும், நிஜமான அனுபவங்களுக்குள்ளாவது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தவும் முடியும். அப்படிப் பாவனையாக்கம் செய்வது சரியான காலப்பிரமாணத்திலும் திட்டமிட்டபடியும் நிகழ்ந்தால் மூளையால் தனது முழு வாழ்க்கையும் கற்பனை என்பதை உணரவே முடியாமல் வாழக்கூடிய சாத்தியம் வரலாம்.
மூளை தனது சொந்த நினைவுகள், அடையாளத்தைப் பேணிக்கொண்டே, ஐன்ஸ்டைன் போலவும் காந்தி போலவும் சிந்திக்க அப்போது முடியும். மூளைக்கு இப்படியான சாத்தியம் முழுவதையும் அளித்த பிறகு, மனிதர்களிடம் உனக்குத் தொட்டிக்குள் கிடக்கும் சாவாத மூளை மூலம் வாழும் வாழ்க்கை வேண்டுமா, அல்லது நிஜமாகப் பிறந்து நிஜமாக இன்ப, துன்பங்களுக்கு உள்ளாகி, வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் இறக்கும் வாழ்க்கை வேண்டுமா என்று கேட்டால் எதை மனிதன் விரும்பக்கூடும் என்பதுதான் எனது கேள்வி.
சர் ஆர்தர் கானன் டாயல் உருவாக்கிய ஷெர்லாக் ஹோம்ஸ் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம். நீங்கள் விரும்பிப் படிக்கும் பிற எழுத்தாளர்கள் யார் யார்?
அறிவியலைப் பொறுத்தவரை எனக்கு பீட்டர் மேடவாரை மிகவும் பிடிக்கும். அவரது சிறந்த படைப்பான ‘ப்ளூட்டோஸ் ரிபப்ளிக்’ என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவியலின் வரலாற்றையும், அறிவியலின் ஆன்மா பற்றியும் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்திய ஓவியம், சிற்பக் கலை மரபு பற்றிய நூல்கள் எனக்குப் பிடிக்கும். ஹென்ரிச் சிம்மர், ஆனந்த குமாரசாமி போன்றோர் எனக்கு ஆதர்சம். எனது சகோதரர் ரவி வழியாக எனது பத்து வயதிலிருந்து ஷேக்ஸ்பியர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
மூளை என்ற அற்புதமான, இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பிரதேசத்தில் ஆய்வுசெய்யும் உங்களை ஆச்சரியமூட்டும் அம்சம் எது?
வலியின் உண்மையான இயல்பு பற்றித்தான் எனக்கு மிகுந்த வியப்பு உள்ளது. தற்போதைய நிலையில் என்னால் தீர்வு காண முடியவில்லை. உடல்ரீதியாக ஊறுபடுத்தப்படும்போது வரும் வலி ஒரு நிலை. பிரிவு, நேசம், பரிவு ஆகியவற்றால் உணரும் துன்பமும் வலியை உணரும் அதே மூளை இணைப்பிலிருந்துதான் நடக்கிறது. உணர்வுரீதியான வலி, அடிப்படையான வலியை உணரும் இடத்திலிருந்துதான் பரிணமிக்கிறது.
அங்கு சமூகரீதியான பரிணாமம் சேர்கிறது. இடத்துக்கு ஏற்றவாறு அதன் வெளிப்பாடு வேறாக இருக்கிறது. அதுதான் வடிவெடுத்த அறிதிறன் (எம்பாடீட் காக்னிஸன்ஸ்) எனப்படுகிறது. மொழியின் படிமத் தளங்கள் செயல்படுவதும் அப்படித்தான். மூளையில் இடது ஆங்குலர் கைரஸ் சேதமடைந்த ஒரு நோயாளியிடம் ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற மரபுத்தொடரைச் சொல்லி அர்த்தம் கேட்டோம். அவர் நகைக்கடைகளில் நகை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டுமென்று அர்த்தம் என்று பதில் சொன்னார்.

