எழும்பூர், கிண்டி உட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன பாஸ் வழங்குவது நிறுத்தம்: இட நெருக்கடியால் அதிகாரிகள் நடவடிக்கை

212 0

சென்னையில் எழும்பூர், கிண்டிஉட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான மாதாந்திர பாஸ் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இடநெருக்கடியை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் வழக்கமாக செல்லும் பலரும் தங்கள் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதற்கேற்ப, விமான நிலையம், ஆலந்தூர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட 23 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்தும் இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, சில மெட்ரோரயில் நிலையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. போதிய இடம் இல்லாததால், பயணிகள் அங்குள்ள ஊழியர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் மாதாந்திர பாஸ் வழங்குவது திடீ ரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, சில பயணிகள் தங்கள் வாகனங்களை மாதக்கணக்கில் இங்கேயே நிறுத்தி வைக்கின்றனர். இதனால், இட நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, நெருக்கடியை தவிர்க்கும் வகையில் எழும்பூர், கிண்டி,அண்ணா நகர் கிழக்கு, திருமங்கலம், உயர் நீதிமன்றம், மண்ணடி, நங்கநல்லூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தப்படுகிறது. தினசரி கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் வசதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி பயணிகள் சிலர் கூறியபோது, ‘‘மெட்ரோ வளாகங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பது அல்லது கூடுதல் இடம் தேர்வு செய்து விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் எந்த வகையிலும் தடைபடாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றனர்.