அரச நிறுவனங்களில் சிங்கள அல்லது தமிழில் உரையாட மக்களை அனுமதிக்கப்பட வேண்டும் -அனுர

310 0

ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக அரச நிறுவனங்களில் சிங்கள அல்லது தமிழில் உரையாட மக்களை அனுமதிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் காத்தான்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு தற்போது உள்ள ஒரே அச்சுறுத்தலாக தீவிரவாதம் காணப்படுகின்றது என்றும் இதனை கருவியாக வைத்து கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் செயற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எனவே தீவிரவாதத்தை தோற்கடிக்க அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சிகள் போதுமானதாக இருக்கும் என்று திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்காமல் நம் நாட்டினை முன்னேற்ற முடியாது என சுட்டிக்காட்டிய அனுரகுமார, தனது ஆட்சியின் கீழ் எந்தவொரு சமூகத்திலும் தீவிரவாதம் தோன்ற அனுமதிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.

மேலும் மாறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதால் எமது நாடு அழகுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெண்களை அங்கீகரிக்க கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தவறிவிட்டதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பெண்கள்தான் ஆடை மற்றும் தோட்டத் துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுகிறாரர்கள் எனவும் சுட்டிக்காட்டிய அனுரகுமார, அவர்களினாலேயே நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.