ஜப்பானில் ஹகிபிஸ் புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 80,000 பேர் வரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அதிகாரிகள் தரப்பில், “ ஜப்பானில் 10 நாட்களுக்கு முன்னர் ஹபிகிஸ் புயல் தாக்கியதைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள சுமார் 80,000 பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஜப்பானில் வரலாறு காணாத பாதிப்பை ஹபிகிஸ் புயல் விட்டுச் சென்றது. இப்புயல் காரணமாக ஜப்பானின் கிழக்குப் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்புயல் காரணமாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டனர். ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 80 பேர் வரை பலியாகினர்.

