போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

464 0

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பை தவிர்த்து விட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பண்டிகை காலம் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக் கூடிய சூழ்நிலையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டாக்டர்களின் கோரிக்கை குறித்து அரசு செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தீபாவளி

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்து ஏற்பட்டால் சிகிச்சை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரை ஊற்றி அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.